தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

முதல் பக்கம்

 வேதபாடம்

வாழ்கை வரலாறு

இருதய துடிப்பு

கட்டுரைகள்

தமிழகம்

பெண்கள் பகுதி

கவிதைகள்

இனைப்புகள்

எங்களைப் பற்றி

கடந்த இதழ்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இயேசு கிறிஸ்து  என்பவர் யார்?

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தேவன் வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரங்கள், பூக்கள், புல் வகைகள், செடி, கொடிகள், பறவைகள், மிருகங்கள் ஆகிய அனைத்தையும் சிருஷ்டித்தார். ஆனால் தான் படைத்த அனைத்திலும் மிகவும் அற்புதமானதாகவும், அழகானதாகவும் மனிதனையே தேவன் உருவாக்கினார்.

தேவன் தான் உண்டாக்கிய மனிதனை ஆதாம் என்று அழைத்தார். அவன் தனிமையாக இருப்பதை அவர் விரும்பாமல் அவனுக்குத் துணையாகவும், ஆறுதலாகவும் இருப்பதற்காக ஒரு பெண்ணையும் உண்டாக்கினார். ஆதாம் தனக்குத் துணையாக உண்டாக்கப்பட்ட பெண்ணுக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஆதாமும் ஏவாளும் வசிப்பதற்காக ஏதேன் என்னும் ஒரு நந்தவனத்தை தேவன் ஆயத்தம் செய்தார். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து பாவஞ்செய்யாமல் இருக்கும்வரை அதிக சந்தோஷமாயிருந்தார்கள்.

தோட்டத்திலே தேவன் ஏராளமான மரங்களுடன் சேர்த்து இரண்டு விசேஷித்த மரங்களை வைத்தார். அவைகள் தேவனுக்குச் சொந்தமானவை. ஆதாம் தோட்டக்காரனாக இருந்துகொண்டு இந்த மரங்களைக் கவனித்துவர தேவன் விரும்பினார். ஆனால் அந்த இரண்டு மரங்களில் ஒன்றின் கனியைப் புசிக்க தேவன் மனிதனை அனுமதிக்கவில்லை. அந்த மரத்துக்கு "நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்' என்றும், மற்றதற்கு "ஜீவ விருட்சம்' என்றும் பெயர். முதல் மரத்தின் கனியைப் புசித்தால் நன்மை, தீமை எது என்று அறியலாம்; அடுத்தமரத்தின் கனியைப் புசித்தால் ஒருபோதும் சாகாமல் இருக்கலாம். மனிதன் தீமையை அறிந்து கொள்வதைத் தேவன் விரும்பவில்லை, எனவே தம்முடைய பிள்ளைகள் அந்த மரத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று தேவன் கூறியிருந்தார். நம்முடைய பிள்ளைகள் பாவம் இன்னதென்று அறிந்து கொள்வதையும், உலகத்திலுள்ள தீமையான காரியங் களில் ஈடுபடுவதையும் நாம் விரும்பமாட்டோம் அல்லவா? அதுபோலவே ஆதாமும், ஏவாளும் தங்கள் இனிமையான கபடமற்ற தன்மையை இழந்துவிடு வதைத் தேவன் விரும்பவில்லை. தூய்மையும், புனிதமு மான குணமே இந்தக் கபடமற்ற தன்மையாகும்.

தேவன் உலகத்தைப் படைப்பதற்குமுன் மோட்சம் என்ற ஒரு இடத்தை ஆயத்தம்பண்ணி, தம்மைச் சேவிக்கவும், ஆராதிக்கவும் ஆயிரமாயிரம் பரலோக ஜீவன்களை அங்கே உண்டாக்கி வைத்திருந்தார். இந்த வானலோக சிருஷ்டிகளை நாம் தேவதூதர் என்கிறோம். இந்தத் திரள் கூட்டமான தூதர்கள் மத்தியில் பரிபூரணமான ஒழுங்கு இருந்தது. அவைகள்மேல் தலைமைதாங்கிய பொறுப்புள்ள தூதர்களுக்குப் பிரதான தூதர்கள் என்று பெயர். லூசிபர் என்ற பிரதான தூதர்களில் ஒருவன் பெருமைகொண்டு தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தான். அவன் தன் பக்கமாக எராளமான தூதர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து, தேவனுக்கு மாத்திரமே உரிய சிங்காசனத்தில் அமர விரும்பி மறைமுகமாகப் போர் செய்யத்துவங்கினார்கள். இதன் விளைவாக, தேவன் லூசிபரையும், அவனோடு சேர்ந்து கலகம் செய்த தூதர்கள் அனைவரையும் வானலோகத்திலிருந்து தள்ளிவிட்டார். அவர்களுக்குரிய தண்டனையின் இடமாக ஆயத்தம் செய்யப்பட்டதே பாதாளம், நரகம், அக்கினிக்கடல் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய மேன்மையிலிருந்து தள்ளப்பட்டுப் போன லூசிபர் அல்லது சாத்தான் தேவனுடைய திட்டங்களில் குறுக்கிட விரும்பி, ஒரு பாம்பின் உருவில் ஏதேன் தோட்டத்துக்குள் நுழைந்து தன் தந்திரத்தினால் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொல்லியிருந்த "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை' பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆதாம் ஏவாளை ஏமாற்றிப் புசிக்கும்படி செய்துவிட்டான்.

தனது வர்த்தைகளை மீறி, சாத்தானுடைய வஞ்சக வலையில் வீழ்ந்து, கீழ்ப்படியாமற்போன ஆதாமையும் ஏவாளையும் தேவன் தோட்டத்தை விட்டு வெளி யேற்றினார். அவர்கள் ஜீவவிருட்சத்தின் பழத்தைப் பறித்துப் புசித்து என்றென்றும் தங்கள் பாவங்களில் நிலைத்திராதபடிக்கு இப்படிச் செய்தார். ஆனால் அவர்களின் பாவத்தின் விளைவாக தம்மோடுள்ள நித்திய உறவிலிருந்து அவர்கள் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு விடாதபடிக்கு ஒரு மீட்பின் திட்டம் தேவனுடைய மனதில் இருந்தது.

ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை என்ற பாவத்தினாலே சாபம் அவர்கள்மேல் வந்தது. அவர்கள் சந்ததியாகிய நாம் அனைவரும் அன்று முதல் இன்றுவரை பாவம் செய்யும் விருப்பத்துடன் பிறந்திருக் கிறோம். குழந்தைப் பருவம் முதலாகவே மனிதரின் வாழ்வில் பாவசுபாவம் அல்லது பாவம் செய்வதற்குரிய ஆவல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

ஆதாமும் ஏவாளும் தங்கள் அழகிய ஏதேனி லிருந்து தேவனால் வெளியே அனுப்பப்பட்டபோது அவர்கள் அடைந்த துக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் பாவத்தின் சாபத்திலிருந்து அவர்களை விடுவிக்க தேவன் ஒரு மீட்பரை அனுப்புவதாக அவர்களுக்கு வாக்களித்தார். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த வாக்குத்தத்தத்தின்படி தங்கள் பாவத்தை நீக்கி, பாவத்தின் நியாயத்தீர்ப்பிலிருந்து தங்களை விடுவிக்கும் தேவகுமாரனின் வருகைக்காகத் தலைமுறை தலைமுறையாக மக்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். இப்படிக் காத்திருப்பதில் மக்கள் சோர்ந்து போகும் ஒவ்வொரு சமயத்திலும் தேவன் தீர்க்கத்தரிசிகளாகிய தனது ஊழியர்களை அனுப்பி அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கும்படி சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

ரோமர்கள் உலகத்தில் ஆளுகைசெய்தபோது சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் தேவன் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். தீர்க்கத்தரிசிகளால் கூறப்பட்டபடியே கன்னியாயிருந்த மரியாளிடம் பிறந்த இயேசு என்னும் குழந்தைதான் தேவனால் வாக்குபண்ணப்பட்ட, மக்கள் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த உலக இரட்சகர். அக்குழந்தைக்கு பூலோகத் தந்தை இல்லையென்பதால்  அவரது பிறப்பு அற்புதமான ஒரு பிறப்பாகும். குழந்தை உருவானபோது மரியாளுக்கு திருமணம் ஆகியிருக்க வில்லை. அவளுக்கு எந்த மனிதனுடனும் புருஷ சம்பந்தம் ஏற்படவுமில்லை. இது சாதாரணக் குழந்தையல்ல; ஏனெனில் அவர் மனித உருவில் வெளிப்பட்ட தேவ குமாரன். அவர் உலகத் தோற்றத்திலிருந்து தேவனாகவே இருந்தவர். மனிதரைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக அவர் மனித ரூபமெடுத்து ஒரு குழந்தையாகப் பிறக்குமளவு தம்மையே தாழ்த்தினார்.

இயேசு உலகில் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்தார். எல்லாவிதத்திலும் மனிதராகிய நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராக இருந்தார். இந்த உலகில் பாவமே செய்யாதவர் அவர் ஒருவர்தான். அவரே மனித உருவில் வெளிப்பட்ட தேவன். அவர் இப்பூமியில் மனிதருடைய சகல பாவங்களையும் மன்னித்தார். மக்களுக்கிருந்த எல்லா வியாதிகளையும், நோய்களையும் நீக்கியதுடன், சப்பாணி, குருடர், ஊமையர் போன்றோரைச் சுகப்படுத்தி, மரித்தோர் சிலரையும் எழுப்பினார். அவர் நன்மை செய்பவராகவும், பிசாசின் வல்லமையில் அகப்பட்டவர்களைக் குணமாக்குகிற வராகவும் ஊழியம் செய்தார். திரளான ஜனங்கள் அவரில் விசுவாசம் வைத்து அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால் போலியான மதகுருக்கள் ஜனங்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கு உயர்ந்ததால், பொறாமை- யடைந்து அவரைக் கொலைசெய்ய முடிவுசெய்தனர். ஒருநாள் இரவில் அவர்கள் அவரைப் பிடித்து அதிகாரிகள் முன்பாக நிறுத்தி, வீண்பழிகளைச் சுமத்தினர். பொய்சாட்சிகள் சொல்லப்பட்டது. முடிவில் அநீதியாகத் தீர்ப்புச்செய்து அவரைக் குற்றவாளி- யென்று தீர்ப்புச்செய்தனர். ரோமர்கள் மிகக்கொடிய குற்றவாளிகளைச் சிலுவையில் அறைவதுண்டு, அதன்படியே அவருக்கும் செய்தனர்.

அநீதியாளர்களின் வெற்றியும் மகிழ்ச்சியும் நிலைக்க வில்லை. காரணம்: சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு கிறிஸ்து அப்படியே மண்ணோடு மண்ணாகிப் போய்விடவில்லை. மரணம் அவரைப்பிடித்து வைத் திருக்க முடியவில்லை. அவர் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாயிருப்பதினால் பிசாசையும், மரணத்தையும் வென்றவராக மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அதன்பின் 40 நாட்கள் தனது சீஷருக்கும், பிறருக்கும் தரிசனமாகித் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். பின்பு அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். ஏன் அவர் மரித்தார்? தம்மைத்தாமே இரட்சித்துக் கொள்ள சக்தி யில்லாததினாலா? அவர் பரலோகத்திலிருந்து தூதர்களை இறங்கிவரச்செய்து தம்மை விடுவித்துக் கொண்டிருக்கலாம். அவர் வல்லமையுள்ள தேவன் அல்லவா? ஆனால் அவர் மரித்ததற்கு ஒரு நோக்கமுண்டு. நம்முடைய பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொள்ளவே அவர் மரித்தார். நாம் செய்த பாவங்களுக்காக நாம் நியாயந்தீர்க்கப் படுவதற்குப் பதிலாக அவர்தாமே அந்த நியாயத்தீர்ப்பை தன்மேல் ஏற்றுக்கொண்டு ஆக்கினைத் தீர்ப்படைய தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். பாவத்தினால் தேவனுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட பிளவை நீக்கி பரிசுத்தமான தேவனுக்கும், மனிதனுக்குமுள்ள உறவை வளர்க்கத் தாமே வழியாக மாறினார்.

அன்பான சகோதரனே, சகோதரியே, இது ஒரு கட்டுக்கதையல்ல! ஒருவேளை இதற்குமுன்பு இதைப் பற்றிக் கேள்விப்படாதவர்களுக்கு இது புதுமையாகத் தோன்றலாம். ஆனால் இதை விசுவாசிக்கும் எங்களுக்கு இது ஆறுதலாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவு மிருக்கிறது. இயேசுவே மனுக்குலத்தின் மெய்யான இரட்சகரென்றும், அவர் உங்களுடைய  பாவங்களைப் போக்கும் பிராயச்சித்த பலியாக மரித்து, உயிரோடு எழுந்தாரென்றும் நீங்கள் விசுவாசித்தால் உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பையும், இவ்வுலகம் தரமுடியாத சமாதானத்தையும், நித்தியமான வாழ்வையும் அடைந்துகொள்ளுவீர்கள்.

இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவரை நேசிப்பதையும், அவருடைய மகிமைக்காக பிழைப்பதையும், நான் உங்களுக்குத் தெரிவிக்கும் இந்தச் சத்தியங்களை நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லுவதையும் அவர் விரும்புகிறார். இந்தத் தேவஅன்பின் செய்தியை நீங்கள் அசட்டை செய்தால் தேவனுடைய அன்பையும், அவர் அருளும் ஆசீர்வாதங்களையும், இறுதியில் அவரோடு மோட்சத்தில் வாழும் பேரின்ப பாக்கியத்தையும் இழந்து போய்விடுவீர்கள். ஆனால் நீங்கள் அவரை விசுவாசித்தால் மரித்தபின் வரப்போகிற பயங்கரமான ஆக்கினையினின்று விடுதலையாவீர்கள். இதற்காகவே: ""இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்-படிக்கு அவர் இவ்வுலகில் மீட்பராக வெளிப்பட்டு, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.''

வருத்தப்பட்டு பாவம், வியாதி, துன்பம் முதலிய பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்- பாறுதல் தருவேன். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று இயேசு கூறுகிறார். பாவமன்னிப்பு பெறுவதற்கு வேறு வழியே கிடையாது. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார். பல வழிகளில் இயேசுவும் ஒரு வழியல்ல, இயேசுவே வழி! இயேசுவே சத்தியம்! இயேசுவே ஜீவன்! இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எவராலும் பாவத்திலிருந்து இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின்கீழே மனிதர் நடுவே இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. இயேசு கிறிஸ்துவை அறியாத எவரும் தேவனை அறியவில்லை. மனிதருக்குச் சரியாகத் தோன்றுகிற வழிகளுண்டு, அதன் முடிவோ மரணம் என்று பைபிள் கூறுகிறது.

எனவே, எனக்கு அருமையான நண்பரே! உங்களைத் தேவனுடைய இராஜ்யத்தின் அனுபவங்- களான சந்தோஷமும், சமாதானமும் நிறைந்த வாழ்வை அனுபவிக்க முடியாதபடி தடுக்கிற விபச்சாரம், வேசித்தனம் சுயவிருப்பமான ஆராதனைகள், மாய மந்திரங்கள், பில்லிசூனியங்கள், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், குடிவெறி, போதைப் பொருட்களை உபயோகித்தல் முதலிய பாவங்களை விட்டு மனந்திரும்பி இன்றே இயேசுவிடம் வாருங்கள். அவர் சிலுவையில் சிந்தின இரத்தம் உங்கள் பாவங்களை நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும்.

இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தை நியாயந்தீர்க்க மீண்டும் வரப்போகிறார். ஒரேதடவை மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் எல்லா  மனிதருக்கும் பொதுவாக நியமிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மனந்திரும்பி விசுவாசத்தோடு இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும், ஒரே வழியாகவும் ஏற்றுக்கொண்டால் நித்திய ஜீவனைப்பெற்று மோட்சம் சேர்ந்து என்றென்றும் அவரோடு வாழுவீர்கள். இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்- கிறவன் நித்திய ஜீவனை உடையவன். இயேசுவை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை; தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும். துன்மார்க்கரும், தேவனை விரும்பாத எல்லா மக்களும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

இயேசுகிறிஸ்துவின் சுருக்கமான இந்த வரலாற்றை வாசித்தபின் நீங்கள் அவரைப் பின்பற்றி தேவனுடைய பெரிய குடும்பத்தில் சேர விரும்பினால் காலம் கடத்தாமல் நீங்கள் ஒரு பாவி என்று ஒப்புக்கொண்டு, மனந்திரும்பி, விசுவாசத்தோடு இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்து, உங்கள் நோய்களையெல்லாம் குணமாக்கி, உங்கள் ஆத்துமாவை அழிவுக்கு விலக்கி மீட்பார். இந்த ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினால்; இப்போது தலைவணங்கி பின்வரும் எளிய ஜெபத்தைச் செய்யவும்.

பரலோகப் பிதாவே! நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். நான் ஒரு பாவியென்று அறிக்கையிடுகிறேன். நான் அநேக தவறான, பாவமான காரியங்களைச் செய்தவன் என்பதை நான் அறிவேன். என்னைத் திருத்திக்கொள்ள என்னால் முடியவில்லை. ஆனால் என்னைத் திருத்த உம்மால் முடியும். தேவரீர் எனக்கு உதவிசெய்ய வேண்டு- கிறேன். என் பாவங்களுக்காக நீர் மரித்ததற்காக  இயேசுவே உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் பாவங்களினிமித்தம் எனக்கு வரவேண்டிய தண்டனையை நீர் ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தயவாக இப்பொழுதே எனக்கு மன்னிப்பு அருளி, என்னை உம்முடைய பிள்ளையாக்கி விடும். உம்மை என் சொந்த இரட்சகராக இப்பொழுதே நான்  ஏற்றுக்கொள்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். என் ஆயுள் முழுவதும் நான் உமக்காகவே பிழைக்கவும், அவசியமானால் உமக்காகவே மரிக்கவும் எனக்குக் கிருபை தாரும். உம்மைப்போல தூய்மையும், பரிசுத்தமும் உள்ளவனாக என்னை மாற்றிவிடும். இயேசுவின் நாமத்தில் என் ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்''.

உலகம் தரக்கூடாத சமாதானத்தையும், மகிழ்ச் சியையும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இப்பொழுதே பெற்றுக்கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்து அருளும் சமாதானமுள்ள மெய்வாழ்வைப் பற்றி இன்னும் அதிகமாக அறியவும், மகிழ்ச்சிக்கு வழிகாட்டி என்ற அழகான இலவச வேதபாடப் புத்தகத்தைப் பெறவும், உங்கள் பிரச்சனைகள், வியாதிகள் நீங்க பிரார்த்தனை செய்யவும் விரும்பினால் எங்கள் முகவரிக்கு எழுதுங்கள், அல்லது நேரில் வாருங்கள்.

 

இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், மனுக்குலத்தின் இரட்சகராகவும் இருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசித்து, அவருடைய நாமத்தினாலே இவ்வுலகில் நிம்மதியான வாழ்வையும், இவ்வுலக வாழ்வை முடித்தபின் தேவனோடு நித்தியகாலமாக மோட்ச வாழ்வை யும் அனுபவிக்கவேண்டுமென்ற பேராவலுடன் இப்பிரதி வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் வாசித்தபின் உங்கள் அன்பிற்குரிய மற்றவர்களும் இதை வாசிக்கும்படி செய்யுங் கள். தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிவதாக!

- நன்றி Agape Bible Church, Bangalore. E-mail:- [email protected]



Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1