home-vayusutha:
banner

Sri Vishnu Sahasranamam and parayana slokas are available in various Indian language scripts on this site


News about NCR Delhi Sahasranama Satsangams

தின மலர் பிப்ரவரி 10,2013 IST
விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண வெள்ளி விழா


புதுடில்லி: டில்லி மயூர்விகார் பேஸ் 2 காருண்ய மகாகணபதி கோயிலில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண காரியத்தின் 25 வது வருட நிறைவை ஒட்டி சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது .

கணபதி ஹோமத்துடன் தொடங்கி ,தொடந்து சுதர்சன, தன்வந்தரி ஹோமம், லக்ஷ்மி குபேர மஹா ஹோமம், ஹயக்ரீவ ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம மகாஹோமம் ஆகியவை சாஸ்திரிய முறைப்படி சேங்காலிபுரம் உ .வே.வெங்கடேச பட்டாச்சாரியார் குழுவினரால் சிறப்பாக நடத்திவைக்கபட்டது.அன்றைய மாலைகளில் மயூர்விஹார் சிறுவர்களின் நாம சங்கீர்த்தனம், மகளிர் திருவிளக்கு பூஜை, சமஷ்டி விஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பார்ச்சனை என ஒவ் வொருநாள் நிகழ்சிகளிலும் மக்கள் பெருமளவு கலந்து கொண்டனர்

இறுதி நாள் மாலை விழாவில் தேர்தல்ஆணைய தலைவர் சம்பத், தில்லி சட்டமன்ற உறுப்பினர் அனில் குமார் பங்கேற்றனர். விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயண புத்தகம் 'ஸ்தோத்ர ரத்னா 'சம்ஸ்க்ருதம் , தமிழ், மலையாளம் மொழிகளில் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். அதை கோயில் பிரசிடெண்ட் மகாலிங்கம், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.

புத்தகம் வெளியிடும் இறைபணியில் பணியாற்றிய மீனாக்ஷி ஷங்கர், விஜயலட்சுமி மாதவன், தங்கம், விஜயகுமார் ஆகியோருக்கு பாராட்டுகளுடன் பரிசுகள் வழங்கப்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்கு டாக்டரின் அறிவுரையும், வழிகாட்டுதலும் எப்படி அவசியமோ அது போன்று வாழ்க்கையில் இறைசக்தியுடன் தொடர்பு கொள்ள நாம பாராயணம் அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று சம்பத் தமது உரையில் வலி யுறுத்தினார்.

அடுத்ததாக டில்லி டாக்டர் ஆரவமுதாச்சரியரின் 'நாம மகிமை' பற்றிய உபன்யாசம் நடைபெற்றது. ஹோமங்களை சிறப்புற நடத்தி வைத்த பட்டாச்சாரியார்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.


- புதுடில்லியிலிருந்து மீனா வெங்கி




தினமணி 19 February 2013 12:36 AM IST
108 வேத பண்டிதர்கள் பங்கேற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம்


வேத பாராயணத்தில் ஈடுபடுவது மனத்துக்கு மட்டுமின்றி புறச்சூழலையும் அமைதிப்படுத்துகிறது என்பது வேதத்தில் திளைத்தோரின் அனுபவம்.

அதுவும் வடநாட்டுப் பண்டிதர்களும், தென்னாட்டு வேத விற்பனர்களும் ஒருங்கே பங்கேற்று வேத பாராயணத்தில் ஈடுபடுவது அதை விடவும் சிறப்பு.

தில்லி கோல்மார்க்கெட் பகுதி 53-வது பிளாக் கம்யூனிடி ஹாலில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நிகழ்ந்த விஷ்ணு சகரஸ்ரநாமப் பாராயணம் இதை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது.

கோல் மார்க்கெட் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத் சங்க வெள்ளி விழா நிகழ்ச்சி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாளில் அகண்ட பாராயணம் (நட்சத்திர மாலை) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பண்டிதர்கள் இடைவிடாது மந்திரம் முழங்கினர்.

நான்கு வேதங்களையும் ஓதும் சதுர் வேத பாராயணம் நிகழ்ச்சியில், வடநாட்டைச் சேர்ந்த பண்டிதர்களும், தென்னாட்டைச் சேர்ந்த பண்டிதர்களும் என 108 பேர் பங்கேற்றனர்.

ஞாயிற்றுக்கிழமை சுதர்ஸன ஹோமம், லட்சுமி அஷ்டோத்திரம் நடைபெற்றது.

"பாசுரப்படி ராமாயணம்' நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ஜெயா குழுவினர் நடத்தினர். அதாவது, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற ராமாயண நிகழ்வுகளைக் குறிப்பிடும் பாசுரங்களைத் தொகுத்து பெரியவாச்சான் பிள்ளை வடிவமைத்ததுதான் "பாசுரப்படி இராமாயணம்'.

பாசுரப்படி ராமாயணம் பாடிய நிகழ்ச்சியில் தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர்.

"திருப்புகழில் ராமாயணம்' பாடல்களை கிருஷ்ணன் குழுவினர் பாடினர். தொடர்ந்து, ராமகிருஷ்ணன், ரமணி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோல்மார்க்கெட் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சங்கத்தைச் சேர்ந்த விஜயராகவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.